மெல்போர்னின் CBD -ல் உள்ள Dymocks புத்தகக்கடையில் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாக வாடிக்கையாளர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. புத்தகம் வாங்க வந்த வாடிக்கையாளரை ஊழியர் தடுப்பூசி செலுத்தி இருக்கிறாரா என்பது தொடர்பான சான்றிதழை பார்ப்பதற்காக QR Code-ஐ ஸ்கேன் செய்ய கேட்ட போது வாடிக்கையாளர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடை ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊழியரை எஸ்கலேட்டர் படிக்கட்டில் தாக்கி அவரை நிலை குலைய வைத்ததாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில் ஊழியர் சுயநினைவை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊழியரை தாக்கிய வாடிக்கையாளரை அடையாளம் கண்டறியப்பட்டு விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், வானவில் நிற ஹூடி டி சர்ட் அணிந்த நபர் ஊழையரை தள்ளி விட்டு இறங்கி செல்வது பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து உடனடியாக புத்தகக் கடையில் பாதுகாப்பு அதிகாரிகளை Dymocks நிர்வாகம் நியமித்துள்ளது. அவர்களுக்கான ஊதியம் வாரத்திற்கு 4 ஆயிரம் டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக இந்த புத்தக கடை செயல்பட்டு வருவதாகவும் இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்னதாக நிகழ்ந்ததில்லை என்றும் நிர்வாகம் கூறியுள்ளது. அதேநேரத்தில் தடுப்பூசி சான்றிதழை காட்டுவதற்கான QR Code -ஐ ஸ்கேன் செய்ய கேட்டபோது இதற்கு முன்னதாக பெண் ஒருவர் ஊழியரை கன்னத்தில் அறைந்ததாகவும், மற்றொருவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் கடை நிர்வாகம் கூறியுள்ளது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய சில்லரை வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் Paul Zahra, சமீப நாட்களில் ஊழியர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் இது மிகவும் வருத்தத்திற்குரிய சம்பவம் என்றும் கூறியுள்ளார்.
Link Source: https://ab.co/3lqaQjy