விக்டோரியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கோவிட் தொற்று எண்ணிக்கை ஒரு வாரத்தில் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஒமைக்ரான் வைரசின் புதிய வகை திரிபு வைரஸ் BA.2 தொற்று அதிகம் பரவத்தொடங்கி உள்ளதாக சுகதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் நியூசவுத்வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா மாகாணங்களை ஒப்பிடும் போது இது மிகவும் குறைவான எண்ணிக்கையிலான தொற்றுப்பரவல் என்று மெல்போர்ன் பல்கலையின் ஆய்வாளர் Tony Blakely கூறியுள்ளார்.
புதிய வகை வைரசின் பாதிப்புகள் குறிந்து அறிந்து கொள்வது மிகவும் கடினமாக உள்ளதாகவும், அறிகுறிகள் பெருமளவு காணப்படவில்லை என்றும் கூறியுள்ளார் .
மேலும், விக்டோரிய சுகாதார அதிகாரிகள் கழிவு நீர் மாதிரிகளில்ஒமைக்ரான் வைரஸின் புதிய துணைத் திரிபைக் கண்டறிந்துள்ளனர். Tullamarine பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட கழிவு நீர் மாதிரிகளில் BA.4 அல்லது BA.5 துணைத்திரிபு கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, பெல்ஜியம், டென்மார்க், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த துணைத்திரிபு சமீபத்தில் குறைந்த எண்ணிக்கையில் கண்டறியப்பட்டது.
தெற்கு ஆஸ்திரேலியா ஏப்ரல் 15 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் முகக்கவச கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. எனினும் ஊனமுற்றோர் பராமரிப்பு மையங்கள், முதியோர் பராமரிப்பு மையங்கள், சிறைச்சாலைகள், சீர்திருத்த மையங்கள் அல்லது பயிற்சி மையங்கள் மற்றும் பொது அல்லது தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
புதிய வகை திரிபு வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்றாலும் தற்போதைய வேகம் கட்டுப்படுத்தக் கூடியது என்றும், முந்தைய வைரஸ் பாதிப்பின் தீவிரத்தன்மையை ஒப்பிடுகையில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் மெல்போர்ன் பல்கலை ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதே நேரம் வைரஸ் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உச்சபட்ச பாதிப்பை எட்டுவதற்கான நிலையை உறுதியுடன் தடுத்து வருவதாகவும் ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ருஸ் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் டேனியல் ஆன்ட்ருஸ் கூறியுள்ளார்.