ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக மெல்போர்ன் வந்த உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரரான நோ நோவக் ஜோகோவிக் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு ஹோட்டல் ஒன்றில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ஆஸ்திரேலியாவுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். அதேநேரம் சக டென்னிஸ் வீரர்களை உரிய விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் இதுபோன்ற விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா வருவதற்கு முன்பாகவே ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 16ஆம் தேதி தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஒரு மாத காலத்திற்கு உள்ளாகவே அவர் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க ஆஸ்திரேலியா வந்ததாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியா எல்லைப் பாதுகாப்பு படையினர் ஜோகோவிச் உடன் நடத்திய விசாரணை விவரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஜோகோவிச் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத விவரங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் எதன் அடிப்படையில் அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது என்றும், தடுப்பூசி விவகாரத்தில் உண்மையை மறைத்தது ஏன் என்பது தொடர்பாகவும் விவரங்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
ஜோகோவிச் குடியமர்வு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட விவகாரம், அவருக்கு விசா நிராகரிக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக செர்பிய வெளியுறவுத்துறை கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. ஜோகோவிச் விவகாரம் மூலமாக அரசியல் விளையாட்டை ஆஸ்திரேலியா நடத்தி வருவதாகவும் கடும் குற்றச்சாட்டுகளை செர்பியா முன்வைத்துள்ளது.
அதேநேரத்தில் ஆஸ்திரேலிய மத்திய நீதிமன்றத்தில் நடைபெற்று வரக்கூடிய வழக்கு விசாரணையில் செர்பியா எந்தவிதமான தலையீட்டையும் செலுத்தாது என்றும், ஜோகோவிச் உரியமுறையில் நடத்தப்பட வேண்டியதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் சிறை பிடிக்கப் படவில்லை என்றும், குடியமர்வு விவகாரங்களுக்காக அவர் உரியமுறையில் விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் ஆஸ்திரேலிய உள் துறை அமைச்சர் Karen Andrews கூறியுள்ளார். எல்லை பாதுகாப்பு படை உடனான விளக்கங்கள் உரியமுறையில் கிடைக்கப் பெற்றால் அவர் எந்த நேரமும் விடுவிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Link Source: https://bit.ly/3JUSZvs