பல்வேறு நாடுகளில் சிக்கித்தவிக்கும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்ப தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், சர்வதேச எல்லைகளை திறப்பதில் அரசு கடுமை காட்டி வருகிறது. அதே நேரத்தில் இதே நிலை நீடித்தால் ஆஸ்திரேலியா ஒரு துறவு நாடாக மாறிவிடும் என்று தொடர்ந்து விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் உள்ள மக்களின் நலனே முக்கியமானது அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்களை படிப்படியாக மீட்கும் நடவடிக்கை களையும் வெளியுறவுத்துறை சரியான முறையில் கையாளும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடுமையான தொற்று பாதிப்பு உள்ள நிலையில் அங்கு இருக்கும் ஆஸ்திரேலியர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. சர்வதேச எல்லைகளைக் கடந்து விமானங்களை இயக்கும் பட்சத்தில் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நிறுத்தப்பட்டுள்ள வேலைகள் காரணமாக தொழிலாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவது தொடர்பாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கண்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவை துறவு நாடாக மாற்றும் முயற்சியை அரசு மேற்கொண்டு வருவதாக கூறப்படும் விமர்சனங்களை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை என்றும் நிதித்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே தடுப்பூசி பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் நிதித்துறை அமைச்சர் கூறியுள்ளார். மற்ற நாடுகள் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசு அடுத்த ஆண்டுக்கு மத்தியில்தான் அனைத்து சர்வதேச எல்லைகளும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள நிலையில் மாநில அரசுகள் அதற்கான தேதியை உறுதி செய்ய மறுத்துள்ளன. இந்நிலையில் உடனடியாக தடுப்பூசி போடும் பணிகளை நிறைவு செய்தால்தான் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் நடைபெற்ற விவாதத்தில் ஆஸ்திரேலியா கோவிட் விவகாரத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை பாதுகாத்ததாக அமைச்சர்கள் கூறினர். அதே நேரத்தில் வேலை இழந்தவர்கள், பொருளாதார பாதிப்பு உள்ளிட்டவற்றில் அரசு கவனம் செலுத்தவில்லை என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பு ஊசி போடப்பட்டு இருக்கும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சர்வதேச எல்லைகளை திறப்பது தொடர்பான விவகாரத்தில் அரசு நிதானித்து முடிவு எடுக்கும் என்றும், அதிக தொற்று பாதிப்பு இல்லாத நாடுகளை முதலில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அங்கிருந்து ஆஸ்திரேலியர்கள் சொந்த நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சர்வ தேச எல்லைகளை மூடி அதன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை சரி செய்வதற்காக மேலும் பல்வேறு நபர்களுக்கு உள்நாட்டிலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை இந்த ஆண்டு பட்ஜெட் மூலம் ஏற்படுத்தப்பட்ட இருப்பதாக நிதித்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதன் காரணமாக நாட்டு பொருளாதார நிலை சீராகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/33Rs6EW