விக்டோரியாவில் கடந்த செவ்வாய் அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர்களின் எண்ணிக்கை 10,627. இது கடந்த மாதத்தை விட 80 சதவீதம் அதிகமாகும். இந்த தரவுகள் மாநில சுகாதார அதிகாரிகளை அச்சமடையச் செய்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மெல்பேர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் ப்ரூஸ் தாம்சன், மூன்றாவது அலையை தொடர்ந்து அதிகமான ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். படிப்படியாக மக்களும் முகக்கவசம் அணிவதை கைவிட்டனர். இதுபோன்ற நடவடிக்கைகள் மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவுவதற்கு காரணமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையில் பணியாற்றும் பல முக்கிய அதிகாரிகளுக்கு தற்போதைய பாதிப்பு எண்ணிக்கை கவலை அளிப்பதாக உள்ளது என ஆஸ்திரேலிய மருத்துவச் சங்கத்தின் துணைத் தலைவர் கிறிஸ் மோய் கூறியுள்ளார். கொரோனாவின் துணை வகைகள், ஏற்கனவே வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களை மீண்டும் பாதிக்கச் செய்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பலர் உயிருக்கு ஆபத்தான நிலை வரை சென்று காப்பாற்றப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விக்டோரியாவில் அடுத்த இரண்டு மாதங்கள் கடுமையாக இருக்கும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர். உடனடியாக மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நிலைமை கையை மீறி சென்றுவிடவும் வாய்ப்புள்ளதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.