ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் உள்ளிட்ட மருந்துகளின் பற்றாக்குறையை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தெரியப்படுத்தி வரும் நிலையில் பற்றாக்குறை காரணமாக இந்திய மருத்துவத்துறை கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது.
உலக அளவில் இந்தியாவில் ஒரு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டு மக்களுக்கு வானொலி வழியே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கொரோனா புயல் நாட்டையே உலுக்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே இந்தியாவுக்கு தேவையான தடுப்பூசி மூல மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அமெரிக்கா முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முழுநேரமும் இந்தியாவின் செயல்பாடுகளை கவனித்து வருவதாகவும், இருக்கும் மருத்துவ பொருட்களை உரிய நேரத்தில் அனுப்பி வைத்து வருவதாகவும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித்தொடர்பாளர் Emily Horne கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பசி தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ரேபிட் டெஸ்ட் செய்வதற்கான கிட்- களை இந்தியாவிற்கு அனுப்பி வருவதாக Emily Horne தெரிவித்துள்ளார்.
முதல் அலையில் இந்தியா அமெரிக்காவுக்கு உதவிக்கரம் நீட்டிய நிலையில், இந்தியாவின் தற்போதைய தேவைக்கு நாங்கள் உதவுவதற்கு தயாராக இருக்கிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிவிட்டர் வாயிலாக தெரிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில், அமெரிக்காவில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. தடுப்பூசிகள் போதுமான அளவு இருப்பு இருக்கும் நிலையில் மேலும் மூன்று தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் வேலைய தொடங்கவுள்ளன. அந்நாட்டு வணிகத்துறை ஜாம்பவான்கள் தொடர்ந்து அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளுக்கு அனுப்பவும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் அரசுத்தரப்பில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பாக இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
பிரான்சின் இருந்து வரும் விமானங்களில் குறிப்பிடத்தக்க வகையில் கூடுதல் ஆக்சிஜன்களை கையாளும் அளவுக்கு திறன் மேம்பாட்டை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பிரான்ஸ் பிரசிடென்சி தெரிவித்துள்ளது.
இதே போன்று பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய முன்வந்துள்ளது.
இந்தியாவிற்கு அனைத்து வகையிலும் பக்க பலமாக இருப்போம் என்றும், தேவையான மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். இந்த துயர நிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் அனைத்து செயல்பாடுகளுக்கும் துணை நிற்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தொற்று பாதிப்பு தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட ஏராளமான மருத்து உதவிகளை செய்ய நேசக்கரம் நீட்டி வருகின்றன.
Link Source: https://bit.ly/3vslp8m