விக்டோரியாவில் 92% பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 79% பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1355 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாகவும்,11 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து விக்டோரியா மாகாண சுகாதாரத்துறை தரப்பில் வெளியிடப்பட்ட தகவலில் சுமார் 68,484 நபர்களிடம் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
135 அதி தீவிர சிகிச்சை பிரிவிலும், 747 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 6 மணியில் இருந்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், பொழுது போக்கு தளங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனி நபர் இடைவெளியை பின்பற்ற வாய்ப்புள்ள இடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்திற்குள் பயணம் செய்ய எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதால், நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
80% மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், சில முக்கிய பொழுது போக்கு நிகழ்வுகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வருவதால் இனி விக்டோரியா சுகாதாரத்துறை தரப்பில் இருந்து, தொற்று குறித்த தினசரி செய்தியாளர் சந்திப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கொரோனா காலத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்த முக்கிய ஆவணங்களை , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசு வழங்க மறுப்பதாகவும், இது மிக மோசமான முன் உதாரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் அரசின் ரகசியம் காக்கும் ஒரு அம்சமாகவே , இந்த தகவல்களை தர மறுப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், போக்கு வரத்தை ஒழுங்கு படுத்தும் பணியிலும், சட்ட ஒழுங்கு காக்கும் பணியிலும் காவல்துறையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். விக்டோரியாவில் தொற்று குறைந்து வந்தாலும் ஊரக பகுதிகளில் கடந்த 10% என்ற அளவில் இருந்த பாதிப்பு தற்போது 14% என்ற எண்ணிக்கைக்கு உயர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்று கூறும் சுகாதாரத்துறையினர், மக்கள் போதிய விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அறிகுறிகளை அலட்சியமாக கருதக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
Link Source: shorturl.at/mBOU8