ஆஸ்திரேலியாவின் மாகாண தலைநகரங்களை உள்ளடக்கிய பெரும்பாலான நகர்ப்பகுதிகளில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லங்கள் நடத்துவதற்கு போதிய பணம் இல்லாத காரணத்தால் மூடப்பட்டு வருகிறது. இதனால், அங்கு தங்கியுள்ள முதியோரின் எதிர்காலம் நிச்சயமற்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
உடனடியாக 166 இல்லங்கள் மிக மோசமான நிதி நெருக்கடி காரணமாக மூடப்படும் நிலை உருவாகி உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சில இல்லங்கள் ஏற்கனவே மூடப்பட்டதால் அங்கிருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான முதியவர்கள் அடுத்து எங்கே செல்வது என்கிற குழப்பத்தில் தவிக்கின்றனர்.
அதேநேரத்தில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலமாக நடத்தப்படும் இல்லங்கள் போதிய படுக்கை உள்ளிட்ட வசதிகள் இல்லாத காரணத்தால் மூடப்படுவதாகவும், நிதி நிலைமை மட்டுமே காரணம் இல்லை என்றும் அதன் நிர்வாகிகள் கூறியுள்ளனர். முதியோர் பராமரிப்பு இல்லங்களில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தொடர்பான சிக்கல் பொதுவானது அல்ல என்றும், களையக் கூடிய அளவில் உள்ள பிரச்சனை மட்டுமே என பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது போன்ற காரணங்களால் கடைசி நேரத்தில் முதியவர்களை தவிக்க விடும் நிலையை ஏற்படுத்தும் இல்லங்களை கூர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றும் முதியோர் பராமரிப்பின் பாதுகாப்பு மற்றும் தர அமைப்பின் Stephen Lesslie தெரிவித்துள்ளார். முதியோர்களை பாதுகாத்து பராமரிப்போர் வெறும் உதவி செய்யும் நபர்களாக மட்டும் இல்லாமல் அவர்களுக்கு முழுமையான காவலனாக செயல்பட வேண்டும் என்றும் Stephen Lesslie கூறியுள்ளார்.
முடிந்தவரை தங்களால் ஆன உதவியை, ஆதரவை பராமரிப்பு இல்லங்களுக்கு தொடர்ந்து வழங்குவோம் என்றும், நிதி நிலைமை சீராவதற்கான நடவடிக்கைக்கு வழிகாட்டுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, பராமரிப்பு இல்லங்களை புதுப்பிக்கவும், படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பணியாளர்களின் சம்பளத்தை வரைமுறைபடுத்தவும் ஒரு புதிய மாதிரி திட்டத்தை உருவாக்கி அதை அனைத்து இல்லங்களுக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.