ஆக்கஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஒவ்வொரு செயல்பாடுகள் குறித்தும் சீனா தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது. அந்த வகையில் மூன்று நாடுகளின் ஒப்பந்தம் அணு சக்தி பரவல் அபாயத்தை ஏற்படுத்துகின்றது என்றும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் சீனா கூறியுள்ளது.
இதுதொடர்பாக பெய்ஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் Wang Yi இவ்வாறு கூறியுள்ளார்.
அணுசக்தி பரவல் குறித்து கருத்து தெரிவித்துள்ள Wang Yi, ஆஸ்திரேலியா மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை பிராந்திய அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட மூன்று நாடுகளின் பிராந்தியங்களில் இருந்து பல்வேறு சந்தேகங்கள் மற்றும் எதிர்ப்புகள் தொடர்ந்து எழுப்பப்படுவது தான் கவனித்து வருவதாகவும், அதேநேரத்தில் இவற்றை பொருட்படுத்தாமல் காட்டாட்சி போல மூன்று நாடுகளும் செயல்பட்டு வருவதாகவும் Wang Yi விமர்சித்துள்ளார். அணுசக்தி பரவல் குறித்த அடிப்படை கொள்கைகளை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மூன்று நாடுகளும் தொடர்ந்து மீறி வருவதாகவும், இது அபாயத்தின் அறிகுறி என்றும் Wang Yi கூறியுள்ளார்.
ஆக்கஸ் நாடுகள் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தும் தவறான முடிவுகளின் அடிப்படையில் செயல்படுத்த படுபவை என்றும், இதன் மூலமாக அணு சக்தி பரவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்றும் Wang Yi எச்சரித்துள்ளார்.
Link Source: https://ab.co/3m92OMD