சீனாவில், சங் ஷா நகரைச் சேர்ந்த பிராட் குரூப் என்ற நிறுவனம், நவீன தொழில்நுட்பத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் 2011 ல் 46 மணி நேரத்தில் 15 அடுக்கு கட்டடத்தை கட்டி சாதனை படைத்துள்ளது. இதே போன்று தற்போது 28 மணி நேரம் 45 நிமிடங்களில் 10 மாடி கட்டடம் ஒன்றை கட்டி பிராட் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
முப்பரிமாண வடிவில் மிக நேர்த்தியான திட்டமிடலுக்கு பிறகு இதன் பாகங்கள் அந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. பிறகு தனித்தனியாக கொண்டு வரப்பட்ட அதன் சுவர்களை, 3 கிரேன் உதவியுடன் அந்த நிறுவன ஊழியர்கள் அங்கு நிலை நிறுத்தினர். மின் இணைப்பு, தண்ணீர் செல்லும் வசதி, தங்கும் அறைகள், உட்புற அலங்காரத்திற்கான திட்டமிடல் என்று அனைத்தும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அதற்கான தேவைகள் இந்த ரெடிமேட் கட்டடத்தில் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பிராட் குரூப் நிறுவன அதிகாரி தெரிவித்த போது, இந்த கட்டுமான தொழில் நுட்பம் செலவு குறைந்தது. அத்துடன், விருப்பமான இடத்திற்கு கட்டடத்தை நகர்த்தும் வசதியும் உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் ரிக்டெர் அளவு கோலில் 9.0 நிலநடுக்கத்தையும் தாங்கும் வகையில் உறுதியான அஸ்திவாரம் மற்றும் வலிமையான இணைப்புகளை உள்ளடக்கியது என்று குறிப்பிட்டுள்ளார். மற்ற கட்டடங்களை ஒப்பிடுகையில் இக்கட்டடத்தின் ஆயுட் காலம் அதிகம் என்றும், மறு சுழற்சிக்கு உகந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகளவில் இந்த கட்டுமான தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த பிராட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதில் குடியேற உள்ள டாம் ரிட்டுசி கூறும் போது, மின்னல் வேகத்தில் கட்டடம் எழும்பினாலும், உட்புற அலங்காரங்கள் உட்பட அனைத்து பகுதிகளும் கன கச்சிதமாக உள்ளன என்றார்.
10 மாடி கட்டடத்தின் கட்டுமான பணிகளை, ‘யு டியூப்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ள இந்த நிறுவனத்தின் வீடியோவிற்கு மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Link Source: https://bit.ly/2Uun4wS