குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகன்கள் அளித்த புகார்களை கண்டுகொள்ளாமல் அதன் மீது நடவடிக்கை எடுக்க தவறிய விக்டோரிய காவல்துறையின் மீது அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Michelle மற்றும் அவரது பள்ளி படிக்கும் வயதுடைய குழந்தைகளான Liam, Millie ஆகியோர் தங்கள் பாதிக்கப்பட்டதாக அளித்த புகாரை மனிதாபிமான அடிப்படையில் கூட விக்டோரிய காவல்துறை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் காவல்துறை மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகவும் அவர்கள் அலட்சியத்தை தொடர்ந்து வெளிப்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்த தாய்க்கான உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டிய காவல்துறை அதை செய்யாமல் தவற விட்டு விட்டதாகவும், இந்த விவகாரத்தில் தவறான முறையில் புகார்தாரர்களை கையாண்ட தாகவும் காவல்துறை மீது Michelle தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரத்தில் குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நிலையிலிருந்து கூட காவல்துறையினர் பார்க்காதது, இந்த விவகாரத்தில் மனிதாபிமானமற்ற நடவடிக்கையை வெளிப்படுத்தியதாக உள்ளது என்றும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நான்கு காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
2015 முதல் 2018 ம் ஆண்டு வரை காவல்துறை அதிகாரியான ஜான் என்பவருடன் தொடர்பில் இருந்த Michelle மற்றும் அவரது இரு குழந்தைகள் பல்வேறு முறை கடுமையான வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கிட்டத்தட்ட 70 முறை பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக அவர்களின் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு இது தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் புகார் அளிக்கப்பட்டு ஜானுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் விக்டோரியா காவல்துறை மிகவும் மோசமாக நடந்து கொண்டதாகவும் ஜான் காவலர் என்ற காரணத்திற்காக அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், குடும்ப வன்முறையிலிருந்து தானும் குழந்தைகளும் தப்புவதற்காக வைத்திருந்த பல்வேறு திட்டங்களை காவல்துறை தரப்பில் ஜானிடம் கசிய விட்ட தாகவும் Michelle குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள் என்பதை சிறிதளவும் காவல்துறையினர் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும், சட்டத்தின்படி அவர்களுக்கான உரிய பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் விக்டோரியா காவல்துறைக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்படும் பட்சத்தில், இனி வரும் நாட்களில் குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படுவோருக்கான பாதுகாப்பை உறுதி செய்வது சரியான முறையில் நடைபெறும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3uthqY7