அமெரிக்காவின் நியூ யார்க் மாநிலத்திலுள்ள நகரம் பப்பல்லோ. இங்குள்ள டாப்ஸ் ஃபிரெண்ட்லி பல்பொருள் அங்காடிக்குள் கடந்த 14-ம் தேதி தலைக் கவசம் மற்றும் கவச உடை அணிந்த உள்ளே புகுந்த மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பாக தகவல் தெரிவித்துள்ள பப்ல்லோ காவல்துறை ஆணையர் ஜோசப் கிரமக்லியா, பல்பொருள் அங்காடிக்கு வருவோர் வாகனங்களை பார்க் செய்யும் இடத்தில் அந்த நபர் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 4 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து அங்காடிக்குள் வந்தவர் கண்ணில் பட்ட 6 பேரை சுட்டுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த முன்னாள் காவல் துறை அதிகாரியும் இந்த சம்பவத்தில் சுடப்பட்டு உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டை நேரடியாக இணையத் தில் ஒளிபரப்ப கேமராக்களையும் அந்த நபர் பொருத்தி வந்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வந்ததை பார்த்தவுடன் அந்த நபர் எதுவும் செய்யாமல் சரணடைந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் பப்பல்லோவைச் சேர்ந்த 18 வயதான பேடன் ஜெண்ட்ரன் என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். இதற்கிடையில் குற்றவாளி பேடன் ஜெண்ட்ரனின் பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பப்பல்லோ நகரத்தில் அதிகம் கருப்பினத்தவர்கள் வசிக்கின்றனர். இதனால் அவர்கள் மீது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட நிறவெறி தாக்குதல் என்று கருப்பின மக்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.