முன்னதாக பொதுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை முதல்வர் டாமினிக் பேரோரெட் ஊதிய உயர்வு அறிவித்தார். இது நியூ சவுத் வேல்ஸ் மாகாண ஆசிரியர்கள் கூட்டமைப்புக்கு ஏமாற்றத்தை அளித்தது. அவர்கள் தங்களுக்கு 5 முதல் 7.5 சதவீதம் வரை ஊதியம் உயர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஏற்கனவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள் இரண்டு முறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மூன்றாவது முறையாக நடந்த போராட்டத்தில் மெக்குவைரி தெருவில் இருந்து நியூ சவுத் வேல்ஸ் வரை 20,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்று திரண்டு பேரணியாக சென்றனர். இதுதவிர நியூ சவுத் வேல்ஸின் நியூகாஸ்டில் என்கிற உள்ளூர் பகுதியில் 3000 ஆசிரியர்களும், வுல்லன்காங் என்கிற இடத்தில் 2500 ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.
ஒருநாள் முழுவதும் நடைபெற்ற போராட்டம் காரணமாக 550-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஏஞ்சலோ கவ்ரியலாடோஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதற்காக பணியில் இருக்கும் ஆசிரியர்கள் கூடுதல் நேரம் உழைக்க வேண்டியுள்ளது. இதனால் மாணவர்களின் கல்விக் கற்றலில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆசிரியர்கள் தட்டுப்பாட்டை எங்களால் போக்க முடியாது. அதற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது ஏமாற்றத்தை அளிப்பதாக மாநில கல்வித்துறை அமைச்சர் சாரா மிச்செல் தெரிவித்துள்ளார். இந்த வேலைநிறுத்தம் தேவையற்றது. ஆசிரியர்களின் இதுபோன்ற நடவடிக்கைகள் பெற்றோர்களுக்கு கவலையை ஏற்படுத்தும். கொரோனா பரவலை தொடர்ந்து, இரண்டாண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு வந்துள்ளனர். இந்நேரத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளது, அவர்களுடைய கற்றல் நிலையை மேலும் கேள்விக்குறியாக்கும் என்று தெரிவித்துள்ளார்.