ரத்தத்தில் பாக்டீரியாக்கள் பரவி தொற்று நோயாக உருவெடுக்கும் Septicemia என்கிற நோய்த்தொற்று 3 வயது சிறுமி தார்ணிகாவுக்கு இருப்பதை பெர்த் மருத்துவமனை உறுதி செய்துள்ளது. நீண்ட நாட்களாக மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு வருவதில் மிகப்பெரும் சவால் இருந்ததாக புலம்பெயர் தமிழ் குடும்பத்தின் வழக்கறிஞர் Carina Ford கூறியுள்ளார்.
மத்திய குயின்ஸ்லாந்திலுள்ள Biloela தீவுக்கு முறையே 2013, 2014 ஆம் ஆண்டுகளில் தனித்தனியாக படகுகள் மூலமாக புலம்பெயர்ந்தவர்கள் பிரியா மற்றும் நடேசலிங்கம். இவர்களுக்கு இவர்களுக்கு கோபிகா என்ற 5 வயது பெண் குழந்தையும், தார்ணிகா என்ற மூன்று வயது பெண் குழந்தையும் உள்ளது. இவர்களில் தார்ணிகா தான் தற்போது தீவிர ரத்த தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தையின் காய்ச்சல் அளவு குறையவே இல்லை என்றும் அவர் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புலம்பெயர் தமிழ் குடும்பத்தின் குடியேற்ற வழக்கறிஞர் Carina Ford தெரிவித்துள்ளார். மேலும், குழந்தை தார்ணிகா தொடர்ந்து தன் தந்தையையும் சகோதரியையும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், அவளது உடல் நிலை குறித்து தான் மிகுந்த கவலையும், அச்சமும் கொண்டிருப்பதாக தாய் பிரியா கூறியுள்ளார். இதுபோன்ற மோசமான நிலையில் குடும்பத்தை பிரிந்து இருப்பதை மிகவும் ஆபத்தாக உணர்வதாகவும் பிரியா குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் தீவில் இருந்த மருத்துவமனையில் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், பெர்த் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு சிறுமி தார்ணிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ அவசரத்திற்காக மைனர் குழந்தையை கிறிஸ்துமஸ் தீவில் இருந்து பெர்த் மருத்துவமனை உள்ள மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு இடமாற்றம் செய்ததாக உள்துறை அமைச்சகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தடுப்புக் காவலில் இருக்கும் ஒரு புலம்பெயர் குடும்பத்திற்கு சிறுமியின் உடல்நிலை குறித்த கவலை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக்கி உள்ளதாக அவர்களது குடியேற்ற வழக்கறிஞர் Carina Ford கூறியுள்ளார்.
Biloela தீவில் 2018ஆம் ஆண்டு வரை எல்லை பாதுகாப்பு தடுப்பு காவல் படையினரின் கண்காணிப்பில் இருந்த பிரியா – நடேசலிங்கம் குடும்பம் அதன்பிறகு ஆகஸ்ட் 2019- ல் கிறிஸ்துமஸ் தீவில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இது போன்ற கடினமான சூழலில் அவர்களை தடுப்பு காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்வதாகவும், இதுதொடர்பாக அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்றும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சூழலில் அந்த குடும்பம் தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்று என்று மத்திய எதிர்க்கட்சி உள்துறை விவகாரங்களுக்கான செய்தித் தொடர்பாளர் Kristina Keneally கூறியுள்ளார். ஆனால் சட்டபூர்வமாக இருக்கும் வழிகளின் படி அவர்கள் Bileola தீவுக்கு திரும்புவதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் கூறப்படுகிறது.
Link Source: https://ab.co/3puOpKA