முடக்க நிலை, முகக் கவசம் அணிவது, கட்டாய தடுப்பூசி அறிவிப்பு, தனிமைப்படுத்துதல் போன்ற முக்கியமான அறிவிப்புகளை சுகாதாரத்துறை அமைச்சர் ஏ உத்தர விடுவதற்கு வழிவகை செய்யும் புதிய சுகாதார சட்ட நடவடிக்கைகளை விக்டோரியா ப்ரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் அறிமுகப்படுத்தியுள்ளார்.
டிசம்பர் 15ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் இந்த புதிய சுகாதார சட்ட நடவடிக்கைகள் அமலுக்கு வருவதாகவும் இதன்மூலம் சர்ச்சைக்குரிய வகையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெருந்தொற்று மசோதா மற்றும் அதில் இருக்கும் அம்சங்களை முதலில் பிரகடனப்படுத்தும் முதல் மாகாணமாக விக்டோரியா மாறியுள்ளது என்றும் ப்ரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் குறிப்பிட்டுள்ளார்.
தலைமை சுகாதார அதிகாரி Brett Sutton மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் Martin Foley ஆகியோருடன் முன்னதாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தி இந்த புதிய சுகாதார சட்ட நடவடிக்கைகளை அமல்படுத்துவது தொடர்பாகவும், தற்போது வைரஸ் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வரக்கூடிய ஆயிரக்கணக்கான நோயாளிகளை பாதுகாப்பது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க ப்ரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் உத்தரவிட்டுள்ளார்.
பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல அவசரச் சட்டம் ஆன பெருந்தொற்று மசோதா அரசு இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்தும் அதனை பிரகடனப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் தலைமை சுகாதார அதிகாரி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரத்தில் மாகாணத்தில் விதிக்கப்பட்டிருக்கும் அவசரநிலையை நீண்டகாலத்திற்கு நீட்டிக்க முடியாது என்றும், தடுப்பூசி உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை ஒடுக்கும் வகையில் இந்த புதிய சட்ட நடவடிக்கைகள் அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது சுகாதார நடவடிக்கைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான பாடங்களை நாம் கற்று இருப்பதாகவும் அதனை படிப்படியாக அமல்படுத்தி மாகாணத்தின் நலனை மீட்டெடுக்க வேண்டும் என்றும், எதிர்வரும் காலங்களில் நாம் பொருளாதார ரீதியாக மேம்படுவதற்கு வழிவகை செய்யும் என்றும் ப்ரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே விக்டோரியாவில் ஒரேநாளில் 1204 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூகமாக இரண்டு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர்.
தற்போது மொத்தமாக 11 ஆயிரத்து 224 பேர் வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், நாள்தோறும் சராசரியாக ஆயிரத்திற்கும் மேல் வைரஸ் பாதிப்பு பதிவாகி வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனைத் தவிர்த்து இரண்டு பேருக்கு புதிய வகை வைரஸ் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Link Source: https://bit.ly/3lV7yoJ