கோவிட் – 19 கொரோனா வைரசின் புதிய திரிபு வகை தென் ஆப்ரிக்காவில் இருந்து பரவத் தொடங்கி உள்ளதாகவும், அதற்கு ஒமைக்ரான் என பெயரிடப்பட்டு உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஆப்ரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் உடனடியாக மாகாணத்தின் சிறப்பு சுகாதார திட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தொற்று பாதித்த இருவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்த இருந்ததாகவும், அவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து தோஹாவில் இருந்து சிட்னி வந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் உடன் பயணித்த அனைவரும் நெருங்கிய தொற்று தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்த 12 பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பரிசோதனை முடிவுகள் 14 நாட்களுக்குள் கிடைத்துவிடும் என்றும், அதுவரை அவர்கள் தனிமைப்படுத்துதல் நிலையிலேயே இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தென்ஆப்ரிக்கா, போட்ஸ்வானா, லெசெதோ, ஜிம்பாப்வே, நமீபியா, மாலாவி, மொசாம்பிக், ஈஸ்வட்னி, ஷீஷெல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த வருவோர் கட்டயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
மற்ற சர்வதேச நாடுகளில் இருந்தும் ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் தங்களை உடனடியாக 72 மணி நேரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அடுத்த அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பெருந்தொற்றிலிருந்து நாம் இன்னும் முழுமையாக விடுபடவில்லை என்றும் புதிய வகை வைரஸ் உடன் வாழ பழகிக் கொள்வதற்கான சவாலான சூழலை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்றும் நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியர் Dominic Perrottet கூறியுள்ளார். ஒருபுறம் வைரஸ், மறு புறம் அதன் தி்ரிபு வகைகள் என அனைத்தையும் சந்திக்க வேண்டியுள்ளது என்றும் Dominic Perrottet தெரிவித்துள்ளார்.
திரிபு வகை வைரஸ் தொடர்பான ஆய்வுகளை தற்போது தொற்று நோய் நிபுணர்கள் மேற்கொண்டு வருவதாகவும் இது தொடர்பான விரிவான முடிவுகள் விரைவில் வெளியாகும் என்றும் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக தங்களுக்கான தடுப்பூசி டோசை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் காலதாமதம் செய்தால் இதுபோன்ற இக்கட்டான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
Link Source: https://ab.co/3rkUkFi