இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் , தடுப்பூசி செலுத்துவதில் நிச்சயமற்ற காரணிகள் நிறைய இருப்பதால் தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிப்பது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய அளவில் தடுப்பூசி செலுத்துவதற்கு கொடுக்கப்பட்ட அனைத்து இலக்குகளையும் நீக்குவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்துவதற்காக மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட எந்த இலக்குகளையும் திட்டமிட்டபடி அரசு நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை மருத்துவக்குழு நடத்திய ஆலோசனயில் , 50 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் அஸ்டாஜெனிகா தடுப்பூசிக்கு பதில், Pfizer தடுப்பூசி வழங்க முடிவெடுக்கப்பட்டது.
AstraZeneca தடுப்பூசி செலுத்தப்பட்டதால் இரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவ ஆலோசனைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த வர்த்தக துறை அமைச்சர் Dan Than, ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்பது அரசின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
அக்டோபர் மாதத்திற்குள் 2 கோடி வயதுவந்தோர்களுக்கு தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்படாத நிலையில், பைசர் தடுப்பூசிக்கு முன்னுரிமை என்ற அரசின் கொள்கை முடிவு இலக்குகளை காலவரம்பிற்குள் எட்டுவதை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
பைசர் நிறுவனத்திடம் இதுவரை 4 கோடி தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்ட நிலையில் இதுவரை 1 கோடி தடுப்பூசி மட்டுமே ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதேநேரம் 7 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 17 கோடி தடுப்பூசிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் இது போதுமான எண்ணிக்கை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய எதிர்கட்சி பிரதிநிதி Mark Butler உரிய கால அளவிற்குள் தடுப்பூசி செலுத்தப்பட்டால் தான், உருமாறிய வைரஸூக்கு எதிரான அடுத்த நடவடிக்கையை தொடங்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 11 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.