இங்கிலாந்தில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாடு ஓராண்டுக்குப் பின்னர் நேருக்கு நேர் தலைவர்கள் சந்திக்கும் நிகழ்வாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்திருந்தார். கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த எல்லைகள் திறக்கப்பட்ட பின்பு நடைபெறும் முதல் சந்திப்பு இதுவாகும். இதில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் விமானப்படை விமானம் மூலமாக இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் தரையிறங்க வேண்டிய இடத்தில் இறங்கவில்லை.
Newquay அருகே உள்ள Cornwall விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம், ஜி – 7 மாநாடு நடைபெறும் Carbis Bay நகரத்திலிருந்து 5 மணி நேர பயண தூரத்தில் ஆக்ஸ்போர்டு அருகே RAF Brize Norton என்ற இடத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.
இதேபோன்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் பயணம் செய்த விமானமும் பனிமூட்டம் காரணமாக காலதாமதமாக தரை இறங்கியது. Newquay Cornwall விமான நிலையத்தில் 11.30 மணிக்கு தரையிறக்கப்பட்டது. உலக நாடுகளின் தலைவர்களின் வருகை காரணமாக எந்தவித இடையூறும் இன்றி விமானங்கள் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே கொரோனாவை எதிர்த்துப் போராடும் வளரும் நாடுகளுக்கு 20 மில்லியன் டோஸ் தடுப்பு ஊசிகளை வழங்க உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். ஜி 7 நாடுகள் ஒன்றிணைந்து 1 பில்லியன் தடுப்பூசிகளை பல்வேறு உலக நாடுகளுக்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதேபோன்று ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பானும் சில உறுதிமொழிகளை அளித்துள்ளன.
இந்நிலையில் 3 நாள் பயணமாக இங்கிலாந்து வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் உள்ளிட்டோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். மேலும் எலிசபத் ராணியையும் சந்தித்து நலம் விசாரிப்பதற்கான திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
Link Source: https://ab.co/3vi4Yus