இந்த நடவடிக்கை பழங்குடியின மக்கள் வரலாற்றை நமது இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்ள உதவும் என முதல்வர் பெரோட் நம்பிகை.
இந்தாண்டு இறுதிக்குள் சிட்னி துறைமுகத்தில் ஆஸ்திரேலிய பூர்வகுடிமக்களை குறிக்கும் பழங்குடியினக் கொடி நிரந்தரமாக பறக்கவிடப்படும் பணி அடுத்தாண்டு ஜனவரியில் நிறைவடையும் என்று முதல்வர் பெரோட் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஆஸ்திரேலிய பழங்குடியின மக்களை குறிக்கும் கொடியை சிட்னி துறைமுகத்தில் பறக்கவிட வேண்டும் என்று கூறி பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் பழங்குடியினக் கொடியை சிட்னி துறைமுகத்தில் பறக்கவிட அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய சிட்னி துறைமுகத்தில், ஆஸ்திரேலியாவின் தேசியக் கொடி மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணக் கொடிக்கு நடுவே பழங்குடியினக் கொடி பறக்கவிடப்படும் என முதல்வர் டாமினிக் பெரோட் அறிவித்தார். இதற்காக 2022-23-ம் ஆண்டுக்கான நிதியாண்டு அறிக்கையில் 25 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு இறுதிக்குள் உறுதியான கொடிக்கம்பம் நிறுவப்பட்டு, அதனுடைய உறுதித்தன்மை பரிசோதித்து முடிவு அறிவிக்கப்படும் என முதல்வர் பெரோட் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நமது பழங்குடியினரின் வரலாறு கொண்டாடப்பட வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட வேண்டும். வளமான மற்றும் நீடித்த பண்பாட்டை நம்முடைய ஆஸ்திரேலியாவின் இளைய தலைமுறையினரபுரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
சுமார் 20 அடி உயரத்தில் சிட்னி துறைமுகத்தில் அமையவுள்ள கொடிக் கம்பம், அடுத்தாண்டு ஜனவரி 26-ம் தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஆஸ்திரேலிய பூர்வக்குடி கொடியின் வடிவமைப்பில், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் அடையாளங்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.