ஆஸ்திரேலியாவில் தற்போது பள்ளி விடுமுறைக் காலம் துவங்கியுள்ளது. விடுமுறை நாட்களைக் கொண்டாட மக்கள் பலர் வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களுக்கு செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் கொரோனா பொதுமுடக்கத்தால் விமான நிலையங்களில் பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலையை இழந்தனர்.
பழையநிலை திரும்பிய நிலையிலும், அவர்களில் பலர் பணிக்கு திரும்பவில்லை. இதனால் நாட்டின் முக்கிய நகர விமான நிலையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை பல மாதங்களாக நிலவி வருகிறது. இதனால் பயணிகளை சமாளிக்க முடியாத நிலை தொடர் கதையாகியுள்ளது. தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஏற்கனவே சிட்னி விமான நிலையம் பணியாளர்கள் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், தற்போது பருமழையாலும் பாதிப்பும் சேர்ந்துகொண்டது. ஏற்கனவே விமானங்கள் கிடைப்பதில் ஏற்படும் தாமத்தத்தால் கொதிப்படைந்துள்ள பயணிகள், வானிலை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்படுவது மேலும் அவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இதுதொடர்பாக பேசிய சிட்னி விமான நிலைய செய்தித் தொடர்பாளர், ரத்தாகும் விமானங்களுக்கு பதிலாக மாற்று விமானங்களை ஏற்பாடு செய்யும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. ஆனால் அது அனைத்து இடங்களுக்கும் சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை. எனினும் முடிந்தவரையில் சிட்னி விமான நிலைய ஊழியர்கள் நிலைமையை கட்டுக்குள் வைக்க முயற்சித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பிரிஸ்பேய்ன் விமான நிலையத்திலும் 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இதுதொடர்பாக குறிப்பிட்ட விமானச் சேவை வழங்கும் நிறுவனங்கள் பயணிகளுக்கு விமான ரத்து தொடர்பாக உரிய விளக்கம் அளித்து வருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதேநிலை அடிலேய்டு, விர்ஜின் நகரங்களிலும் காணப்படுகின்றன. இதுதொடர்பாக பேசிய போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அளித்துள்ள அறிக்கையில், விமானப் போக்குவரத்துத் துறையில் பணியிட அமைப்பு முற்றிலுமாக சிதைந்துவிட்டது. இந்தத் துறையில் உள்ள கட்டமைப்பு சிக்கல்களைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.