இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுப் பிரியர்கள் கள்ளச் சந்தையில் கூடுதல் விலை கொடுத்து மது வாங்கி குடித்து வருகின்றனர். ஆனால், பல்வேறு பகுதிகளில் மது கிடைக்காத சூழல் உள்ளது. இதனால் குடிக்கு அடிமையானவர்கள் மாற்று போதை பொருட்களை தேடிச் சென்று குடிப்பதும் அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. சானிடைசர், தின்னர், ஷேவிங் லோஷன், பூச்சிக்கொல்லி மருந்தில் கலக்கப்படும் மெத்தனால் உள்ளிட்டவற்றை குடிப்பதால் போதை உண்டாகும் என நினைத்து உயிரையே இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் எலக்ட்ரீஷியன் ஒருவர் மது கிடைக்காத விரக்தியில் பெயின்டில் கலக்கும் தின்னரை குடித்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
கொரோனா காலத்தில் கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினியில் குறிப்பிட்ட சதவீதம் ஆல்கஹால் இருப்பதால் அதை குடித்தால் போதை உண்டாகும் என்றும், மெத்தனால், பெயின்ட்-ல் கலக்க பயன்படுத்தப்படும் தின்னர் ஆகியவற்றையும் மாற்று போதை பொருட்களாக முயற்சித்து அது உடனடியாக நுரையீரல், குடல், உணவுக்குழாயை பாதித்து நேரடியாக மரணத்தில் கொண்டு போய் விடுகிறது. சென்னை, கடலூர், விழுப்புரம், திண்டுக்கல், திருப்பத்தூர் என பெரும்பாலான இடங்களில் மாற்று போதை முயற்சியால் உயிரை இழந்தோரின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இதனிடையே பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகார்கள் வரும் இடங்களில் மது விலக்கு போலீசார் ஆய்வு செய்து கள்ளச்சாராய ஊரல்களை அழித்து வருவதோடு, சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு 14ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தொற்றுப்பரவரல் அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த தளர்வில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் மது பிரியர்கள்.