டோக்கியாவை அடுத்துள்ள மாவட்டம் ஆக்கிஹாபரா. இங்கு 2008-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி மக்கள் கூடும் சந்தைக்குள் டோமோஹிரோ கேட்டோ என்கிற 25 வயது வாலிபன் கனரக வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றான். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசிலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து அங்கிருந்த 4 பேரை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொன்றான்.
இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் இளைஞன் டோமோஹிரோவை கைது செய்தனர். இதையடுத்து ஜப்பான் வரலாற்றில் அகிஹபரா படுகொலை சம்பவம் கரும்புள்ளியாக அமைந்தது. இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணை உலகளவில் கவனம் பெற்றது.
இணையதளத்தில் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்ததாகவும், அதனால் எழுந்த மன அழுத்தம் காரணமாக கொலைகளை செய்ததாக டோமோஹிரோ வாக்குமூலம் அளித்தான். பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு டோமோஹிரோ கேட்டோ மீதான குற்றத்தை நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து அவனுக்கு டோக்கியோ உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து கொலையாளி டோமோஹிரோ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஜப்பான் உச்சநீதிமன்றம், கடந்த 2015-ம் ஆண்டு டோக்கியோ உயர்நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.
இந்நிலையில் டோக்கியோ சிறையில் இருந்த டோமோஹிரோ கேட்டோ தனது 39 வயதில் கடந்த 25-ம் தேதி தூக்கிலிடப்பட்டதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்தாண்டு ஜப்பானில் நிறைவேற்றப்பட்ட முதல் தூக்குத் தண்டையாக இது அமைந்துள்ளது. தற்போதையை நிலவரப்படி ஜப்பானில் 107 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 61 பேர் மேல்முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.