ஐரோப்பாவிலுள்ள பிரபல விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மக்கள் வரிசையில் உடமைகளுடன் காத்திருப்பதும், அத்தியாவச தேவைகளை பூர்த்தி செய்யாமல் தவித்து வருவதும், உடமைகளை தொலைத்துவிட்டு தேடுவதும், திட்டமிடப்பட்ட சுற்றுலாவுக்கு செல்ல முடியாமல் புலம்புவதுமாக ஒவ்வொரு பயணிகளும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
அதற்கு காரணம் கொரோனா. கொரோனா பரவல் காரணமாக விமானச் சேவை வழங்கும் நிறுவனங்களில் பணியாற்றி வந்த பலர், வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் நிலைமை மீண்டும் சரியான பிறகு, வேலையிழந்த பெரும்பாலானோர் பழைய வேலைக்கு திரும்பவில்லை. இதனால் ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவியுள்ளது.
இதன்காரணமாக நடப்பு சுற்றுலா நாட்களை கொண்டாட ஐரோப்பாவுக்கு செல்ல திட்டமிட்ட பலரும், விமான நிலையங்களிலேயே முடங்கிக்கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பயணச்சீட்டுகளை பரிசோதிப்பது தொடங்கி, உடமைகள் சரிபார்த்து சேகரிப்பது மற்றும் உடமைகளை கையாளுவது போன்ற பணிகளுக்கு ஆட்களே இல்லை. இதனால் பயணிகள் பலரும் விமான நிலையங்களில் பலநேரம் காத்திருக்கும் சூழல் எழுந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு விமானச் சேவை வழங்கும் நிறுவனங்கள், அரசு தற்போதைய சூழலை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. இதேநிலை தொடர்ந்தால், பயணிகள் காத்திருப்பு மற்றும் பயணச்சேவை பாதிப்பு மேலும் பல மாதங்களுக்கு தொடரக்கூடும் என அவை எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதற்கிடையில் பணிநேர நீட்டிப்பு மற்றும் பனிச்சுமை காரணமாக விமானச் சேவை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற பிரச்னைகள் நீடித்தால், அனைத்து விமானச் சேவை நிறுவனங்களும் வேலைநிறுத்தத்தில் குதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்காரணமாக ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவர்கள் ஒன்றுகூடி, இவ்விவகாரத்தில் சுமூகமான தீர்வை மேற்கொள்ள கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.