கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலையிழந்த விமான நிறுவனங்களின் ஊழியர்கள் பலர், நிலைமை சீரடைந்த பிறகு மீண்டும் அதே பணிகளுக்கு திரும்பவில்லை. இதனால் விமானப் போக்குவரத்து துறையில் சுணக்கம் ஏற்பட்டது. ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் விமான பயன்பாட்டில் தாமதம் உள்ளிட்ட நெருக்கடிகள் முளைத்தன.
கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத வகையில் சீரழிந்த கட்டமைப்புகளால் விமானச் சேவையை வழங்கும் நிறுவனங்கள் சிக்கிக்கொண்டன. இந்நிலையில் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஆராய்ச்சி பொருளாதாரப் பணியகம், கடந்த ஜூன் மாதத்தில் ஆஸ்திரேலியாவின் முக்கிய விமான நிலையங்களில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டது.
அதில் அந்நாட்டில் இருக்கும் மொத்த விமானங்களில், புறப்பாட்டை 63 சதவீத விமானங்களும் வருகையை 61.9 சதவீத விமானங்களும் குறித்த நேரத்தில் பின்பற்றியுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல 5.8 சதவீத விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 2003-ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியால் 2.1 சதவீத விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையை ரத்துச் செய்த நிறுவனங்களின் பட்டியலில் குவாண்டாஸ் 8.1 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து 7 சதவீதத்துடன் குவாண்டாஸ் லிங்க் இரண்டாமிடத்திலும், விர்ஜின் ஆஸ்திரேலியா 5.8 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஜெட்ஸ்டார், உள்நாட்டு விமானச் சேவையை வழங்கும் வெர்ஜின் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கடந்த ஜூன் மாதத்தில் ரெக்ஸ் ஏர்லைன்ஸ் என்கிற நிறுவனம் 0.7 சதவீத விமானங்களை மட்டுமே ரத்து செய்துள்ளன. விமானங்கள் ரத்து மற்றும் தாமதத்தால் சிட்னி மற்றும் மெல்பேர்ன் பகுதியைச் சேர்ந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த மாதங்களில் சிட்னியில் இருந்து கான்பெர்ரா மற்றும் கான்பெர்ராவில் இருந்து சிட்னி வழித்தடங்களில் செல்லும் விமானங்கள் அதிகளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விமானச் சேவை வழங்கும் நிறுவனங்கள் பல, வரும் மாதங்களில் நாங்கள் அனைவரும் முன்னேற்றம் காண்போம். இந்த நிலைமை ஆஸ்திரேலியாவில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலகளவிலும் காணப்படுகிறது. வரவிருக்கும் திறன் உச்சி மாநாட்டில் விமானப் போக்குவரத்துத் துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.