தேசிய பழங்குடியினர் மற்றும் தீவுவாசிகள் தினத்தை கடைபிடிக்கும் விதமாக சிட்னியிலுள்ள துறைமுக பாலத்தின் மீது பழங்குடியின மக்களின் அதிகாரப்பூர்வ கொடி பறக்கவிடப்பட்டது. ஏற்கனவே அப்பாலத்தின் மீது ஆஸ்திரேலியாவின் தேசிய கொடி மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்றாவதாக பெரிய கம்பம் நிறுவப்பட்டு பழங்குடியின மக்களை குறிக்கும் கொடி பறக்கவிடப்பட்டது.
இதற்கு 25 மில்லியன் டாலர் செலவிடப்பட்டது. தேசிய பழங்குடியினர் மற்றும் தீவுவாசிகள் தினத்தை முன்னிட்டு ஒரு வார காலம் பழங்குடியின மக்கள் கொடி பறக்கவிடப்பட்டது. ஆனால் அந்த கொடி தொடர்ந்து துறைமுக பாலத்தில் பறக்க வேண்டும் என மக்கள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் டாமினிக் பெர்ரோடெட் ஏற்றுக்கொண்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், துறைமுக பாலத்தில் பறக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் கொடி இறக்கப்பட்டு, பழங்குடியின மக்களின் கொடி பறக்கவிடப்படும் என்று தெரிவித்தார். இதற்கு பழங்குடியின மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.