அமெரிக்காவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. தற்போது அங்கு இந்நோயினால் 2900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் எதிர்பார்த்ததை விடவும் குரங்கம்மை நோய் பாதிப்பு விரைவாக இருப்பதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் தொற்றுநோயியல் நிபுணர்கள் கவுன்சிலின் இயக்குநர் ஜேனட் ஹேமில்டன், சமீபத்தில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரங்களை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் வெளியிட்டுள்ளது. அதன்மூலம், ஆண்களுடன் உறவுகொள்ளும் ஆண்கள் இந்நோயினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்று கூறினார்.
அமெரிக்காவில் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டவர்கள் குறித்த பதிவான விவரங்கள் குறைவுதான். இன்னும் பலர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது தெரியாமல் இருப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நாட்டிலுள்ள மொத்தம் 50 மாகாணங்களிலும் குரங்கம்மை நோய் தடுப்புக்கான பணிகள் தீவிரமாக துவங்கியுள்ளன.
ஏற்கனவே கொரோனா பரவலால் துவண்டுபோன அமெரிக்கா தற்போது தான் மீண்டு வருகிறது. அதற்குள் குரங்கம்மை பாதிப்பும் அந்நாட்டில் அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சமடையச் செய்துள்ளது. அதேசமயத்தில் அமெரிக்க அரசாங்கம் குரங்கம்மைக்கான தடுப்பு நடவடிக்கைகளை மந்த கதியில் முன்னெடுத்து வருவதாக பிரபல ஊடகங்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளன.