நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்திற்கான விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து 8 பள்ளிக் குழந்தைகளும் 87 வயதான ஒரு கன்னியாஸ்திரியும் ஃபெடரெல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அரசின் சுரங்க விரிவாக்க பணிகளால், குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்படும், பொருளாதார இழப்பு ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி இந்த ஆபத்தான திட்டத்தை கைவிட வேண்டும் என மனுவில் அவர்கள் முறையிட்டு இருந்தனர்.
இதுதொடர்பாக இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட ஃபெடரெல் நீதிமன்றம், தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், சுரங்க விரிவாக்கத்தால் ஏற்படும் காலநிலை பாதிப்பிலிருந்து குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு இல்லை. அதனால் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தது. ஃபெடரெல் நீதிமன்ற உத்தரவுக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் சூசன் லே வரவேற்பு தெரிவித்துள்ளார். வருங்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக பிரதமர் மோரீசனின் அரசு தொடர்ந்து இயங்கும் என்று கூறியுள்ளார்.
அதேசமயத்தில் ஃபெடரெல் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த மனுதாரர்களான குழந்தைகள் மற்றும் கன்னியாஸ்திரி ஆகியோர் நீதிமன்ற தீர்ப்பு கவலையை உண்டாக்கியுள்ளது. ஆனால் காலநிலை நீதிக்கான எங்களுடைய போராட்டம் தொடரும். விரைவில் மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்துள்ளனர்.
Link Source: https://ab.co/3tgYa2N