தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 10ம் தேதியில் இருந்து 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை கட்டுப்பாடுகளுடன் இரண்டு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருந்தாலும் நோய் தொற்று அதிகளவில் இருப்பதால் மருத்துவ நிபுணர்கள் அறிக்கையின் படி தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த தளர்வுகளும் இல்லாமல் ஒரு வார முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்தி உத்தரவிட்டுள்ளார். அரசு உத்தரவுப்படி ஒருவாரம் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு இன்று காலை 4 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும் வகையில் டிஜிபி திரிபாதி மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் சுழற்சி முறையில் 1 லட்சம் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
அத்தியாவசிய பணியாளர்களை தவிர மற்ற யாரும் தேவையின்றி வெளியே சுற்ற கூடாது என்று உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
வழக்கத்தை விட இந்த முறை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே தமிழகம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் வாகனம் பறிமுதல், விதிகளை மீறுபவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முதலில் இரண்டு வாரங்கள் அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கின் போது மாவட்டங்களில் அதிகளவில் வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. ஆனால் இந்த முறை கட்டுப்பாடுகளை முறையாக செயல்படுத்தி விதிகளை மீறி வெளியே வரும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் தலைமையில் 12 காவல் மாவட்டங்களில் 13 இடங்களில் சோதனை சாவடிகளும், 153 இடங்களில் வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வார தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கில் சுழற்சி முறையில் 10 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீசார் கட்டுப்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்தியதால் இன்று காலை முதல் சென்னையில் உள்ள சாலைகள் அனைத்து வெறிச்சோடி காணப்பட்டது.
Link Source: https://bit.ly/3ufodVl