ஜீலாங் மாவட்டத்திலுள்ள கோல்டன் பிளையின்ஸ் பகுதியைச் சேர்ந்த 86 அயது முதியவர், கடந்த ஆகஸ்டு 6-ம் தேதி தாக்கப்பட்டார். பர்ரோஸ் சாலையிலுள்ள தனது வீட்டில் தாக்கப்பட்ட முதியவர், கடந்த 2 நாட்களாக யாரும் உதவிக்கு வராமல் தனியாக கிடந்தார்.
அவருடைய நிலையை அறிந்த அக்கம்பக்கத்து வீட்டார், கடந்த 8-ம் தேதி காலையில் முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை அளிக்கப்பட்ட சில மணிநேரங்களில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. கோல்டன் பிளையின்ஸ், பர்ரோஸ் சாலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஐவன் டீக் (60) என்கிற நபர் முதியவரை தாக்கியது தெரியவந்தது. அதையடுத்து உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். ஜீலாங் மாவட்ட நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்ப்படுத்தப்பட்டு, அவரை அதிகாரிகள் விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வரவுள்ளது. இறந்துபோன முதியவரும் அவரை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐவன் டீக்குக்கு முன்னரே அறிமுகம் இருந்ததாக கூறப்படுகிறது. இவ்வழக்கு தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து பர்ரோஸ் சாலை பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.