கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக 60 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 2.5 பில்லியன் டாலர் அளவுக்கு வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலாத்துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக முற்றிலும் நசிந்து போனதாகவும், இதன் காரணமாக ஏராளமானோர் வேலை இழந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அத்துறையை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் நோக்கில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு மேற்கொள்ள இருப்பதாகவும் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.
Cairns நகரத்தில் பேசிய பிரதமர் 45 மில்லியன் டாலர் தொகை ஆஸ்திரேலிய சுற்றுலா துறைக்கும், 15 மில்லியன் டாலர் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியின் பாரம்பரிய தளங்களை மேம்படுத்தவும் செலவிடப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறையில் சர்வதேச பயணிகளை ஈர்க்கும் வகையிலான பெரும்பாலான பகுதிகள் களையிழந்து காணப்படுவது உண்மையில் வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், சரிவிலிருந்து சுற்றுலாத்துறை மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். பெருந்தொற்று காலம் தொடங்கியதில் இருந்து தற்போது வரை சுற்றுலா துறை சார்ந்த 9 ஆயிரம் பேர் தங்களது வேலைகளை இழந்து உள்ளதாகவும் இதனால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமத்தை சந்தித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. படிப்படியாக அவர்கள் தங்கள் வேலைகளுக்கு திரும்பும் வகையில் துறைசார் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் உரிய டிஜிட்டல் வகையிலான விளம்பரங்கள் செய்யப்படும் என்றும், குயின்ஸ்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் அதிக அளவில் பயணிகளை ஈர்க்கும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் தலைமை செயல் அதிகாரி Mark Olsen கூறியுள்ளார்.
Link Source: https://ab.co/3tzxJp1