அமெரிக்காவில் சான் ஆண்டோனியாவில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றி வந்த கொள்கலன் திறன் கொண்ட கனரக வாகனத்தின் 50 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய 4 சிறுவர்கள் உட்பட 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்துபோன நிலையில் மீட்கப்பட்டவர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயன்றவர்கள் என்று மெக்சிக்கோவின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்களில் 22 பேர் மெக்சிக்கோவைச் சேர்ந்தவர்கள் எனவும் 7 பேர் குவாத்தமாலியர்கள் மற்றும் 2 பேர் ஹோண்டுரன் நாட்டினர் என்றும் அவர் கூறியுள்ளார். மீதமுள்ளவரின் அடையாளங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை மாலை 6 மணியளவில், சான் ஆண்டோனியாவின் தெற்கில் அமைந்துள்ள ஊரகப் பகுதியில் இந்த வாகனம் நின்றிருந்ததை உள்ளூர்வாசி ஒருவர் பார்த்துள்ளார். அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்பவர்கள் தப்பிச் செல்லும் முயற்சியாக இந்த சம்பவம் தோன்றுவதாக சான் அன்டோனியோ தீயணைப்புத் தலைவர் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்தபோது சான் ஆண்டோனியாவில் வெப்பநிலை 39.4 டிகிரி செல்சியஸாக இருந்துள்ளது. அதன்காரணமாக கொள்கலன் பகுதிக்குள் இருந்தவர்கள் வெப்பம் தாங்காமல் உயிரிழந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோர்ட், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கொள்கைகள் காரணமாகவே இந்த மரணங்கள் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இறந்துபோனவர்களின் நிலை பைடனின் எல்லைக் கொள்கைகளின் விளைவாகும் என்று தெரிவித்துள்ளார்.