குயின்ஸ்லாந்தின் Cairns பகுதியில் உள்ள மிக முக்கியமான பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு மையமான Goodstart Early Learning Center -ல் கடந்த ஆண்டு 3 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மையத்தின் பேருந்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில், சுமார் நான்கு மணி நேரமாக அவனை பேருந்திலேயே விட்டுவிட்டதாக மையத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குடும்பத்தினரால் செல்லமாக Meeky என்று அழைக்கப்படும் Maliq Nicholas Lloyd Namok-Malamoo, கடந்த ஆண்டு பிப்ரவரி கோடைக்காலத்தின் போது அந்த பகல் நேர பராமரிப்பு மையத்திற்கு சென்ற நிலையில் அம்மையத்தின் பேருந்திலேயே உயிரிழந்தான். இந்த விவகாரம் குறித்த வழக்கு கடந்த ஓராண்டாக குயின்ஸ்லாந்து Cairns மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. Good start Early Learning மையம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குழந்தைகளை உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை என்றும், அதே நேரத்தில் மையத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாக மேஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். இதைவிட மோசமான ஒரு சம்பவத்தை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.
மேலும் Goodstart Early Learning மையத்திற்கு 70 ஆயிரம் டாலர் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். குறிப்பிட்ட பேருந்து ஓட்டுநருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக குறிப்பிட்ட பகல் நேர பராமரிப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரி நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
Link Source: https://ab.co/3kWEVat