பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் கடும் சேதமடைந்துள்ளன. அங்கிருந்து இஸ்லாமாபாத்துகு 30 பயணிகள் பேருந்து சென்றுகொண்டிருந்தது. மலைப் பாதையில் சென்றபோது பேருந்து நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்தது.
இந்த சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பலருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்து நடப்பதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேசிய பலுசிஸ்தான் உதவி காவல் ஆய்வாளர் மெஹ்தாப் ஷா, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 11 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த 19 பேருடைய குடும்பத்தாருக்கு நிவாராணம் கிடைக்க அரசு முயற்சி எடுத்து வருவதாக கூறினார்.
இந்நிலையில் பலுசிஸ்தான் பேருந்து விபத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் வருத்தம் தெரிவித்துள்ளார். தரமற்ற உள்கட்டமைப்பு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களை பதிவு செய்வதாக பிரதமர் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
பலுசிஸ்தான் மாவட்டத்தின் தரமற்ற போக்குவரத்து கட்டமைப்புகளால் பெரும் விபத்துகள் ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. கடந்த மாதம் சிற்றுந்து வாகன விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.