மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் அமைந்துள்ளது துபுல் யார்டு ரயில்வே. இப்பகுதியில் ரயில்வே துறை சார்ந்த கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதற்காக அமைக்கப்பட்டுள்ள முகாம் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த பேரிடர் மீட்பு பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் உள்ளூர்வாசிகள் சேர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட துவங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய மணிப்பூர் முதல்வர் நாத்தாபாம் பைரன், இந்த நிலச்சரிவில் சிக்கி புதையுண்டுபோனவர்களில் ஒரு ராணுவ வீரர் உட்பட 14 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக கூறிய அவர், நிலச்சரிவில் புதையுண்டு போனவர்களின் எண்ணிக்கை இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். இதற்கிடையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து இடிபாடுகளில் சிக்கிய 13 ராணுவ வீரர்கள் மற்றும் 5 பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் காவல்துறை உயர் அதிகாரி பி. டவுங்கல் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்கள், ரயில்வே பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட 30 பேர் வரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அவர் கூறினார்.
புவிவெப்பமயமாதல், பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பிரச்னைகள் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. எதிர்வரும் காலங்களில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வங்காளதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பின் தொடர்ச்சியாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் குறைவான நேரத்தில் பெய்யும் அதீதமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.